Friday, September 2, 2011

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் வரலாறு.


கருவாக்கி உருவாக்கி கற்பகத் தருவாகி 
மருவில்லா திருவான அன்னையே சரணம்.
உறுதியாய் நின்றென்னை பொருளாகச் செய்திட்ட 
அருளே உருவான குருவே சரணம்.

ஆண்டவன் புவிவந்து அத்துணை பேருக்கும் 
அருள்தரல் ஆகாது என்றெண்ணித் தாய்மையை 
ஆக்கினான் என்றொரு வாக்கியம் உள்ளதுவே !
ஆய்ந்துபின் நோக்கினால் அக்கூற்று உண்மையே.

தாயவளின் தூயஉளம் கொண்டுபே ரருள்பெற்ற
நாயகனாம் இப்புவியில் ராகவேந்திர சுவாமிகள்.
நேயர்கள் யாவர்க்கும் நினைத்ததும் அருள்தந்து 
ஆயர்போல் அனைவர்க்கும் அனைத்தும்செய் அருள்வேந்தே.!


பிறப்பின் மூலம்:

சத்யலோகத்தில் பிரம்மாவின் உத்தரவால் சங்குகர்ணன் 
நித்யபூசைக்கு மலர்தர இசைப்பட்டான் புவியிநின்று 
இராமரழகில் மனமயங்கி பூசைக்கு மலரினை 
தராமல் பூமியிலே சிலைபோல நின்றுபோனன் 

சினங்கொண்ட பிரம்மனோ மனம்நொந்து தேவனை 
குணங்கெட்ட அசுரன் ஹிரண்யகசிபின் மகனாக 
பிறக்கக் கடவதாய் பிறப்பித்தார் சாபத்தை 
பிரஹலாத அவதரிப்பின் வரலாறு இவ்வாறே.!

சிறுஉளி பெருங்கல்லை சிதைக்கும் வல்லமையாய் 
ஹரிநேசன் பிரஹலாதன் ஹிரண்யகசிபின் அகந்தையை 
துரிதமாய் விரட்டிட அரிதனை வேண்டினான்
அரக்கனின் ஆட்டம் நரசிம்மரால் அடக்கப்பட்டது.

பிரஹலாதன் பிறப்பின் தொடராக பாரதநாட்களில் 
பாஹ்லிகனாய் மறுபிறப்பு அவனுக்கு விதிக்கப்பட்டது.
உண்டபின்னும் கையை ஒட்டிக்கொள்ளும் வாசம்போல் 
இப்பிறப்பும் பாஹ்லிகனுக்கு ஹரிப்பித்து இருந்தது.

பாண்டவரின் எதிரணியில் பாஹ்லிகன் இருந்தபோதும்
பார்த்தனின் பக்தனாக ஒழுகினான் பரவசமாய்.
பீமனின் கையாலே ஆவியினைத் துறந்தாலும்
பாரினிலே மீண்டும் வியாசராய் பிறந்தானே.

பன்னூரெனும் சிற்றூரில் ராமாச்சார்யரின் மகனாக 
மண்ணூரில் மீண்டும் அரியின் தொண்டராய் 
நெடுந்தவத்தின் பலனாக நீங்கா இன்பந்தரும் 
மத்துவரின் தத்துவத்தை பரப்பிடவே பிறந்தாரே..

அண்டத்தில் நினைப்பே நிலைக்கும் 
மற்றவை மாயையே - உரைக்கிறது தத்துவவியல் 
நான்முகன் சபித்தும் நகன்றதா நாரணபக்தி?
நான்காம் பிறப்பிலும் அதே திண்ணமப்பா..!

ஸ்ரீ ராகவேந்திரரின் பிறப்பு:

கிருஷ்ணதேவ ராயர்சபை அலங்கரித்தார் ஒருவர் 
கிருஷ்ணபட்ட ரென்றபெயர் கொண்டவொரு கலைஞர் 
தந்திதரும் நாதம்வரும் வீணைமீட்டும் பெரியர் 
இந்திரனும் மயங்கிவிடும் இசைவழங்கும் அறிஞர்

கிருஷ்ணபட்டர் பேரனவர் திம்மண்ண  பட்டர் 
இறைவனடி தொழுதுதினம் வீணையதை மீட்பர் 
கோபிகாம்பாள் என்பவரை மனைவியாய்க் கொண்டு 
தீவிரமாய் தெய்வத்தொண்டு ஆற்றியவர் வந்தார்.


இவ்விணைக்கு வாரிசாக இரண்டுமகட் செல்வங்கள்
இளையவளாய் பெண்ணும் இனியவனாய் ஆணும்.
குருராஜர் வேங்கடாம்பா என்பதவர் பெயர்கள் 
குறையாத அன்பொழுகும் அருமைக் குழந்தைகள்.

மீண்டுமொரு மகவுகேட்டு வேண்டினர் வேங்கடவனை 
ஆண்டவன் அருளின்படி அன்னையவள் கருவுற்றாள் 
உலகத்தின் சிகரமாக உண்மையிலேயே மாறப்போகும்
உண்மையது தெரியாது புவனகிரிக்கு அப்போது.

ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று ஐந்து 
பாயிரம் பாடியது வரப்போகும் பேரருளை 
பங்குனி மாதத்தில் பனிக்குடம் விளக்கி 
மங்கள நாயகன் திங்களாய் வந்தான்.

மாணிக்கச் சிலையொன்று மானுட உருவேற்று 
நானிலமீதில் நடைபோட்டு அருள் செய்ய
வானவன் பிறப்பித்த சாசனம் வந்ததய்யா 
வாடியோர் வாட்ட மெல்லாம் மறைந்ததய்யா 

பிரமனவன் படைப்பித்த அற்புதம் அனைத்திற்கும் 
சிகரமாய் அமைந்திட்ட சித்திரம் வந்ததய்யா 
புவனா கிரியில் புத்திரனாய் வந்ததுவோ 
குணத்தில் குறையாத குன்றாச் சோதியய்யா 

செவ்வாய் தினத்தன்று செவ்வாய் சிரித்துவிட 
திங்களும் புதனும் தமக்குள் வருந்தினவே 
கறைகானா வேதத்தின் கரைகாண வந்திட்ட 
நிறையான அருள்பொங்கும் நிச்சயம் வந்ததுவே 

திம்மண்ணரும் அவர்மனையும் திளைத்தனர் மகிழ்ச்சியில் 
கடவுளுக்கும் கடந்தவருக்கும் ஒழுக்குகள் செய்திட்டு 
ஆசார முறைப்படி அனைத்தும் செய்தபின்னர் 
வெங்கட நாதனென்று விளித்தனர் பெயரொன்றை.

வளர்ந்தார் வளமாய் மலர்ந்தார் புலரியாய் 
நல்லோர் நலம்பெற நகைத்துக் களித்தார் 
வறுமையில் வாடிய பெற்றோர் முகத்தை
நறுமுகை பூத்தே நலம்பெறச் செய்தார்.


சுதீந்திர தீர்த்தருடன் வித்யா மடத்தினில்
சுதர்மம் செய்திடவே திம்மண்ணர் முடிவு செய்ய
குடும்பம் கும்ப கோணத்திற்கு நகர்ந்தது
குராஜருக்கு கோமானின் தரிசனம் கிடைத்தது.

வித்யா மடத்தினில் விக்ரஹமாய் வீற்றிருந்த
நித்திய பரிபாலன் நிர்மலன் மூலராமன்
சத்திய சீலர் ராகவேந்திரர் மனதினில்
மத்திய பகுதியில் மலைபோ லமர்ந்தனரே

துவக்கப் படிப்பு துலங்கிய தங்கே
தயக்கம் ஏதுமின்றி விளங்கியது மறை
மயக்கம் கொண்டார் மாதவன் கண்டார்
வியக்கும் சுற்றமே விழிச்சுடர் நோக்கவே

ஆசானே அதிசயிக்கும் அற்புதத் திறமை
ஆதவன் நிலவாகும் சுடர்விடும் புலமை
ஆய்ந்திட்டார் அறிஞர் அளவிடும் கருத்தை
அமரகோஷம் ஆய்ந்திடும் அழகுச் சிறுத்தை

சோதனை தறுதலை சாதனை எனக்கொளும்
பேதைமை பெற்றதோ விதியெனும் பொதியது?
தருவாய் நிழல்தரும் தகப்பன் உயிரதை
பெருவாய் கொண்டது பருகிக் கொண்டது.

அன்னையும் அண்ணலும் அண்ணனும் அன்புடை
தங்கையின் தலைவனின் அடைக்கலம் அடைந்தனர்
தந்தை அகன்ற குடந்தை விடுத்து
மைத்துனர் வசிக்கும் மதுரைக்குச் சென்றனர்

மேற்படிப்பு துவங்கியது மீனாட்சி நகரினில்
நூற்படிப்பு திறன்கல்வி விளையாட்டு கைவரவே
மறைபா மாலைகளும் மந்திரக் குரலெடுத்து
மனதொன்றி ஓதுகையில் மாதவனும் மயங்கினனே.

இந்திர லோகத்து சுந்தர மங்கைகளும்
இளைஞன் வெங்கண்ணனை காணக் களித்திடுவர்
அழகும் அருளும் ஒருங்கே அமைந்திடவே
அரங்கனே அவதரித் துவந்ததுபோல் இருந்ததுவே

பணிவு அடக்கம் பக்தியுடன் தூயஉளம்
பாங்காய் அமையப் பெற்று அனைவருக்கும்
உதாரணம் இவரென்று உலகோர் உரைத்திடவே
உருவமும் உள்ளமும் சுடர்விட வளர்ந்தாரே.

மண்மீது மன்மதன் மனித உருக்கொண்டு
கண்மீது காந்தக் கடலையும் சேர்த்தமைத்து
மங்கையர் யாவரும் மயங்கியே விழுமாறு
சங்கையே நிகர்த்தது மன்னரின் திருமேனி

தந்தையின் நிலையேற்று தனியன் பொறுப்பாக
விந்தைப் பிறவியான சிந்தைப் பெரியோனுக்கு
சரஸ்வதி என்கின்ற சரித்திர மங்கையை
மணமுடித்து மனமகிழ்ந்து ஆசிகள் தந்தாரே.

அடைந்த கணவனோ கிடைக்கற் கரியவன்
கிடைத்த ஆனந்தம் அளவினில் அண்டமே
அடைந்த வாழ்வோ அரியவன் அளித்தது
புடைத்த பெருமையில் திளைத்தனள் அம்மை



மதுரை விடுத்து மனைவியுடன் மாநகர்
கும்பகோணம் குடி பெயர்ந்தார் குருவழைக்க
மனம்வென்றோர் கற்பதனை மணவாழ்வு மறைக்காது
மகிழ்வென்றார் மறைஓதல் மகான் சுதீந்திரருடன்

சுதீந்திர தீர்த்தரெனும் சுந்தரர் அடிதொழுது
சாத்திரம் வேதாந்தம் வேத ஒழுக்கங்கள்
முதலிய யாவையுமே முழுதாய் கற்றபின்னர்
முழுஇரவும் விழித்திருந்து விளக்கவுரை வரைந்திட்டார்.

தெளிந்திட்ட வேதாந்த விளக்கங்கள் விளக்கிடவே
கனிந்திட்ட வாய்ப்பினில் வாதிட்டார் பலருடனே
புரிந்திட்ட வாதமொன்றில் தஞ்சை அரசவையின்
அறிந்திட்ட விற்பன்னர் வெங்கடேஸ்வர தீட்சிதரை

அவையோரும் அரசரும் ஆசார அந்தணரும்
ஆன்றோரும் சான்றோரும் அருமை ஆசானும்
கண்குளிர கருத்தால் களித்திடவென்றே மகாபாஷ்ய
வேங்கடநாதாசார்யா வென்றதோர் பட்டம் பெற்றார்

கற்றவன் அறிவிற் சிறப்பான் - கருத்தை
உற்றவன் ஞானியாய்ச் சொலித்து நிற்பான்
கொற்றவன் குடையிற்கீழ் வாதி யெல்லாம்
பெற்றனர் வெங்கண்ண வேள்வியினில் தோல்வியினை

பத்தினி உடன்பாத யாத்திரை செல்லுகையில்
பாதகன் அறியாது பார்த்திட வேலைதர
அரைத்த சந்தானம் அரிப்பைத் தந்ததுவே
அக்கினி சுக்தமதை அகத்தே சுவைத்ததனால்

ஓதிய வேதமெலாம் உடனே செயலிறங்கும்
போதிய ஞானமுற்ற வெங்கண்ண மாமுனியை
வேதியர் முதலேயாரும் வெக்குண்டு வணங்கி-அருஞ்
சோதியர் பாதமதைப் பணிந்தே தொழுதனர்.

லக்ஷ்மி நாராயணன் என்றதோர் மகன்
சரஸ்வதி வடிவே உருவான மனைவி
ஆன்மீக குரு சுதீந்திர தீர்த்தர்
அருகே மூலராமர் ஆனந்த வாழ்வு 


முழுப்பணி சிறார்க்கு மறைசேர்க்கும் திருப்பணி
திருப்பணி ஆதலால் தீண்டார் பொருளேதும்
பொருளின்றி மெலிந்தார் வறுமையால் வருடமாய்
வருடங்கள் வாட்டியும் வர்த்தகம் செய்யாதார்

குருஸு தீந்திரர் குடிலின் வாரிசாய்
அருமை வேங்கட நாதர் அமரவே
விருப்பம் தெரிவித்தார் விண்ணரசு விளிக்கவே
குழப்பம் குடிகொண்ட குருராஜர் தயங்கினர்

இல்லாளும் தனயனும் இருக்கையில் துறவமோ
சொல்லாத தவிப்புடன் கடமை இல்லமென
மறுத்திட்டார் மறுக்க ஒண்ணாத பதவியை
கருத்திட்டார் இல்லறம் காத்தல் கருமமே

கடைந்திட்ட பாற்கடல் கசிந்த அமுதம்போல்
தடைதந்த குழப்பம் தெளிவாக நித்திரையில்
கலைமகள் தெரிவித்தார் கட்டளையை துறந்திட
அலைமகள் சூழ்மக்கள் ஆனந்தம் அடைந்திட.

மங்கள மடமதில் மறைஓத மால்சேவை
பங்குனி மாதத்தில் பணியேற்றார் துறவியாய்
தீங்கனிச் சுவைதரும் திரவத் திரட்டன்ன
பாங்குடன் பதவியிற் பரிமளித்தார் குருராஜர்

துறவியாய்ப் போகும்முன் தலைவனின் முகம்நோக்க
பறவையாய் பயணித்தாள் இல்லாள் மடம்நோக்கி
இடறிய கால்இட்டுச் சென்றது பாழ்கிணற்றுள்
கதறிய பேதை அடங்கியே பேயானாள்

அந்த உருக்கொண்டே ஆத்துக்காரர் முகம்காண
வந்த ஆவியின் ஆசை அடங்கிடவே
தந்த வரங்கொண்டு தண்ணீர் தெளித்தேயதன்
அந்த மறுத்து ஆண்டவன் அடிசேர்த்தார்

முற்றும் துறந்தவர் மூளையில் வருத்தமாய்
சற்றும் அவள்துயர் இருந்திடல் ஆகாதென
பற்றும் அடியார்க்கு அருள்செய் ஆண்டவனே
மற்றும் ஒருவிளை யாடலைச் செய்தானோ?

பனிரெண்டு ஆண்டுகளாய்ப் பஞ்சம் வாட்டிடவே
பிணிகொண்டு தஞ்சைநாடே பரிதவித் திருந்ததுவே
இனியமழை வரச்செய்ய யாகமொன்று செய்திடவே
பணிந்தே ஸ்வாமிகளை அவ்வரசர் வேண்டினரே

வானத் தரசர் வாட்டியவாட்டம் போக்கவிழை
கானத் தரசர் மூட்டியயாகம் கேட்டமழை
தானத் தரசர் தருவதுபோல் கொட்டித்தீர்க்க
பூணத் திருமாலை பொன்னால் தந்தாரே

இறைவனுக் கேதோ  தருகிறார் என்றெண்ணி
நிறைவுடை ஹோம குண்டமத்தில் குருவீச
குறைமதி கொண்டவவ் வரசனும் கோபமுற
குறையின்றி அம்மாலை கையெடுத்தார் குண்டமதில்

எரிந்ததீ குருராஜர் குழந்தைபோல் பணிந்ததீ
அரிந்ததீ அம்மாலை அங்கம் தொடாததீ
புரிந்ததீ அண்ணலின் உன்னதம் விளக்கும்செயல்
விரிந்ததீ கோமனம் குருநாதர் அடிபணிய.

உலகெங்கும் தத்துவத் தூரிகை பரப்பிடவே
உலாசென்று தீர்த்தக் கரைகள் சேர்ந்தார்
இராமேஸ்வரம் சென்று இராம லிங்கமதை
இராமனே வழிபட்டார் என்றே பகன்றிட்டார்

இன்னும் பற்பல ஐயங்கள் தீர்த்திடவே
மண்ணும் தெளிவுபெறும் விளக்க மளித்தனரே
பன்னும் பற்பல உவமையும் கலந்தே
விண்ணும் வியந்திடும் விரிவுரை செய்தாரே.

திருவரங்கம் முதலா திருவனந்த புரம்வரை
தென்திசை நோக்கிப்பின் உடுப்பி பண்டரிபுரம்
ஆந்திரம் கர்நாடகம் என்றே தேசமெங்கும்
சென்றிசை சேர்ப்பித்தார் இன்னும் பலஊரில்

அதாவனி எனுமூர் அனாதைச் சிறுவனுக்கு
சதாவலி தந்ததவன் சாபம் போக்கிடவே
அருளினார் நினைத்ததும் நீங்கிடும் துயரமென்று
மருளிய வெங்கண்ணன் மனத்திருள் நீக்கிட்டார்

மாதம்சில ஓடியபின் மன்னர் நவாபின்
பாதம்பட அவ்வூரில் அவனை அழைத்து
வந்ததொரு கடிதத்தில் உள்ளதென்ன வினவினார்
குருராஜர் மனத்திருத்தி மடல்தந்த சேதியினை

சுபமுண்டு நாட்டின் எல்லை விரிவடையும்
ஜெயமுண்டு எனஉரைக்க அவனை அவ்வூரின்
அதிகாரி ஆக்கினார் அருஞ்செய்தி தந்ததனால்
இதுபோல பலவுண்டு இன்னும் குருமஹிமை.

கருத்த யானைமீது கவியிவர் தொடுத்த
பெருத்த பாஷ்யத்தை பொருத்தியே பின்தொடர
மாநிலம் முழுதிலும் மக்கள் பாராட்ட
நானிலம் நலம்பெற வந்தவர் நடைசெய்தார்

ஆச்சார்யம் மேற்கொண்டு ஆண்டவன் அருளாலே
ஆச்சர்யம் பலதந்து மாண்டவரை மீட்டுவித்து
பிரார்த்தனை செய்தே பரமானாம் அம்மாய
பார்த்தனை அருகழைத்து அற்புதம் பலசெய்தார்

 பயணம் ஒருபக்கம் படைப்பு மறுபக்கம்
மனனம் ஒருபக்கம் மௌனம் மறுபக்கம்
சத்தியமுழக்கம் ஒருபக்கம் பிரகாசம் மற்றும்
நித்தியமுக்தாவளி போன்ற உரைகள் மறுபக்கம்

வலிமையான கூற்றுடைய வேதத்தின் சாரத்தை
எளிமையான பற்றுடைய பேதைகளும் தெளிவுபெறும்
உணர்ந்தே அனுபவிக்கும் உன்னத வகையினில்
கொணர்ந்தே சேவித்தார் செவிகளை குளிர்வித்தார்

அரிமனம் களிப்புற அயர்ச்சி பாராமல்
பரிமள ஆச்சாரியார் பலநூல் உரைதந்தார்
பரியது பார்த்தன் தேர்சேர பறப்பதுபோல்
பரிமாளர் படைத்தவை பரிமளம் பரப்பின

ஆதியந்தம் அறிவிக்கும் அறிவுசால் மூன்று
சோதிடரும் சோதியவர் சாதகத்தை நோக்கி
நூறென்றும் மூன்றே நூறென்றும் எழுநூறென்றும்
பாரென்றே விதமொன்றாய் படித்திட்டர் கணிப்பினை

சரீரம்ஒருநூறு சாற்றியநூல் பதிப்பது முன்னூறு
அரீயெனவீங்கு வீற்றிருத்தல் ஏழேநூறு என்றதற்கு
சுரீரென்ற கதிரவன்போல் சுணக்கம் விடுவிக்க
மந்திராலய மண்காட்டி மறுவிளக்கம் இயம்பினார்

முன்னால் அதோனியில் அருள்பெற்ற வெங்கண்ணன்
பின்னாள் அவர்வர அடிபணிந்து வரவேற்றான்
குருராஜர் விஜயத்தை அவர்மன்னர் நாவாப்பிற்கே
தெரிவித்த வெங்கண்ணன் தரிசிக்க வருவீரென்றான்

அப்படியென்ன மகிமை ஆய்வோம் உள்ளதை
செப்படிவித்தை செல்லாது என்னிடமே என்றெண்ணி
இப்படிப்பிடி எனக்கூடை மாமிசத்தை மலரென்று
எப்படியிவர் எனநோக்கி எத்தளித்து எதிர்பார்த்தான்

வந்ததோ புலாலென்று புரிந்தது புவனகிரிக்கு
விந்தைதான் புரிவோமென்று வீசிய சிலதுளிகள்
புலாலைப் புஷ்பமாக்கி புத்தியைப் புனிதமாக்கி
விலாசம் நீரேயிந்த அதோனி நகருக்கு

நாணிப் பணிந்து நவாபும் நவின்றிட
கோணிப் பொன்வேண்டா கொற்றவன் கொடைவேண்டா
மாஞ்சால மண்போதும் மனமதில் நிறைவென
வாஞ்சை அறுத்தெறிந்த அதிசயம் கூறிற்று

கிருதா யுகமதில் கருமம் கழிந்திட
பிரகலாத பிறப்பினில் யாகம் நிகழ்த்திய
புண்ணிய பூமியே மாஞ்சாலம் என்பதுவே
திண்ணிய மானதனால் திருத்தலம் எனவுரைத்தார்

பிறந்தவினை கடப்பேன் பிருந்தாவனம்  ஒன்றெனக்கு
நிறுவித்தா வெங்கண்ணா மாஞ்சால மண்மீது
துங்கபத்ரா நதிக்கரையில் துயர்நீக்க நானிருப்பேன்
தங்கிவிட நாளருகில் தக்கவா றுரைத்திட்டார்

 விரோதிகிருது ஆவணியில் வியாழனன்று விடைபெற்று
பிருந்தாவனப் பிரவேசம் பெற்றே தவமிருந்தார்
மருந்தாய் வந்தமகான் மாயை வென்றமகான்
விருந்தாய் விளித்தமகன் விந்தைபல புரிந்தமகான்

மூச்சை அடக்கி மூலம் அழைத்து
பேச்சை நிறுத்தி பிரமனை உருவேற்றி
மாதவம் துவங்கினார் மாதர் கலங்கினார்
ஆதவன் அமைதியாய் அரியினை அணைத்து

கையிறு ஜெபமாலை கழன்றே விழுந்ததும்
கையறு நிலையினை கண்டவர் அடைந்தனர்
சத்தியம் நிறுவிய நித்திய பரிமாளர்
முத்தியைக் கண்டதும் மூடினர் திறப்பை.

சீடர் முதலா மாதர் அனைவரும்
அரிவோம் என்றே அலறினர் துடித்தனர்
அப்போது ஓடிவந்த அப்பண்ணா வழிமறித்து
வெகுண்ட  நதியது வெள்ளத்தால் தடுத்தது

பொங்கிய துங்கபத்ரா பொறுமையைத் தரவில்லை
மங்கள நாயகனை மனதினில் நிறுத்தியே
சுலோக மொன்றை துதித்தே கடந்தார்
உலோக மனத்துடன் மகானைத் தரிசிக்க

தடையொன்று இல்லையே தருமமே உனைக்காண
வருகிறேன் அக்கரைக்கு சக்கரையே என்றுவந்து
நிறைவுற்ற பிரவேசம் கண்டுநா தழுதழுக்க
கடையேழு எழுத்துக்களை பிருந்தாவனம் பகன்றது

பிறப்பே அதிசயம் பிறயாவும் அதிசயம்
வளர்ப்பே அதிசயம் வாசித்த எல்லாமும்
திறப்பே ஞானக்கண் திருவுருவே திருவருளே
அறப்பே ராசானே அறிவே அமுதமே

நீர்தரும் அறிவமுதம் அருளமுதம் இன்றளவும்
வேர்தரும் எம்குலம் வளர்ந்திடவே செழித்திடவே
உம்பாதம் எனக்கென்றும் உறுதுணையின் ஆதாரம்
எம்பேதம் நீங்கியதே உமதருளால் குருராஜா

நேர்மையாய் வாழ்வோம் நேரிய சிந்தையுடனே
மானுட சேவையே மாதவன் சேவையென்போம்
நலிந்தோர் தேற்றுதலே நாரணன் போற்றுதலாம்
நல்லறிவு அடைந்திட்டே நல்லதே செய்திடுவோம்


குருராஜர் அடிபோற்றி குருதேவர் அடிபோற்றி.